கடந்த ஞாயிறு (20-மே-2004) அன்று கோவையில் நடைபெற்ற தமிழ்வலைப்பதிவர் சந்திப்புக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது.
2 வாரங்களுக்கு முன்பே ரயிலில் முன்பதிவு செய்ததால் சிரமம் இல்லாமல் பெங்களூரிலிருந்து சென்று வரமுடிந்தது.
சக வலைப்பதிவர்கள் சிலர் விரிவாக கோவை சந்திப்பு பற்றி எழுதிவிட்டார்கள்.
பார்க்க: http://masivakumar.blogspot.com/2007/05/blog-post_21.html
http://vinaiooki.blogspot.com/2007/05/blog-post_20.html
http://tvpravi.blogspot.com/2007/05/blog-post_9922.html
http://classroom2007.blogspot.com/2007/05/blog-post.html

இந்த சந்திப்பு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. கிட்டதட்ட அங்கு வந்திருந்த அனைவரையுமே (மா.சிவக்குமாரைத் தவிர) தற்போதுதான் முதன்முதலில் நேரில் சந்திக்கிறேன். சிவக்குமாரை கிட்டதட்ட 5 வருடத்திற்கு முன்பு மலேசியாவில் பார்த்தேன். அப்போது இருந்த மாதிரியே தற்போதும் இருக்கிறார் )

வினையூக்கி, சென்சி, பாலபாரதி, மோகன்தாஸ், உண்மைத்தமிழன், வித்யா, செந்தழல் ரவி போன்ற வலைப்பதிவர்களை சந்தித்த மாத்திரத்தில் அவர்களின் சுறுசுறுப்பு என்னையும் தொற்றிக்கொண்டது. நீண்ட நாள் நண்பர்கள் போல் அவர்களுடன் ஒட்டிக்கொள்ள முடிந்தது. ஓசை செல்லாவை சந்திக்க முடியவில்லை என்பது சற்று ஏமாற்றம். பாமரன் அய்யாவின் சமூக அக்கரையுடன் கூடிய கட்டுரைகளை முன்பே படித்திருக்கிறேன். பாமரனை சந்தித்தது எதிர்பாராத மகிழ்ச்சி.

ரமணி அய்யா அவர்களின் பின் நவிணத்துவம் பற்றிய கட்டுரை எனக்கு அவ்வளவாக
ஏற்புடையதாக இல்லை என்றாலும், சிறப்பாக இருந்தது, இலக்கியத்தில்
ஈடுபாடுள்ள நண்பர்களுக்கு அது பயனுள்ளதாக இருந்திருக்கும்.

வலைப்பதிவர் சுப்பைய்யா அவர்கள் தனக்கு எப்படி வாத்தியார் என்ற பட்டம்
வலையுலகில் கிடைத்தது என்று நகைச்சுவையுடன் குறிப்பிட்டார்.
வலைப்பதிவர்கள் தியாகு, கோவை ரவி, தாமோதரன் சந்துரு, செகுவேரா, ஜெயகுமார்,
ராஜாவனஜ் போன்றோரை சந்திக்க முடிந்தது. இயற்கை விவசாயத்தில் ஆர்வலர் திரு
வின்செண்ட் என்ற உள்ளூர்காரரையும் சந்தித்து பேசமுடிந்தது சிறப்பான
அனுபவம்.

சிரில் அலெக்ஸ் அவர்களுடன் ஸ்கைப் வழியாக வீடியோ அரட்டை அடித்ததும் சிறந்த அனுபவம். அவர்கள் நடத்தும் ‘சற்றுமுன்’ சேவை குறித்து விரிவாக தெரிந்துகொள்ள முடிந்தது.

அடுத்த வலைப்பதிவர் சந்திப்பு/பட்டறையில், தொழில்நுட்பம் சார்ந்த விசயங்களைப் பற்றி மேலும் சில அமர்வுகளை ஏற்பாடு செய்தால் சிறப்பாக இருந்திருக்கும் என்பது என் விருப்பம்.

அங்கு நான் படைத்த தொழில்நுட்ப அமர்வின், காட்சிக் கோப்புகளை பி.டி.எப் வடிவத்தில் இங்கு வலை ஏற்றியுள்ளேன். தேவைப்படுவோர் பயன்படுத்திக்கொள்ளலாம்.

இந்தகைய ஒரு சந்திப்பை சிறப்பாக ஒருங்கிணைத்து நடத்திய பாலபாரதி உண்மையில் ‘தல’ தான் :) . பாலபாரதிக்கு என்னுடைய நன்றிகள்.