கோலாலம்பூரில் நிலநடுக்கத்தை உணர்ந்தோம்…
Posted by mugunth on 28 Mar 2005 at 02:14 pm | Tagged as: வாழ்க்கை
இன்று இரவு 12:00 மணி இருக்கும், நான் சாப்பிட்டுவிட்டு கணி முன் உட்கார்திருந்தேன்.
நாற்காலி சற்று அசைவதைப்போல் உணர்தேன், பின் தலைசுற்றுவது போல் லேசான உணர்வு. என்னக் காரணம் என்று யோசித்தேன். பிறகு அறையின் கதவைப்பார்த்தேன், அது முன்னும் பின்னும் தானாக அசைவதைப்பார்த்தப் பின் தான் ஏதோ நடக்கிறது என்பதை உணரமுடிந்தது.
அதற்குள் என் மனைவியும் கட்டடம் அசைவதைப்போல் இருக்கிறது என்று பயத்துடன் சொல்லிக்கொண்டு வந்தார். சன்னலுக்கு வெளியே பார்த்தபோதுதான் மக்கள் வெளியேறிக்கொண்டிருப்பது தெரிந்தது. நாங்களும் அவசர அவசரமாக வீட்டைப் பூட்டிவிட்டு எங்கள் அடுக்குமாடி குடியிருப்பைவிட்டு (Danau Idaman Condominium, Tmn Danau Desa, KL ) வெளியேறினோம். 5ஆம் மாடியில் இருந்து லிப்டை தவிர்த்துவிட்டு , படி வழியாக வெளியேறும்போது எங்கள் அலுவலக நண்பர்களிடமிருந்த கைத்தொலைப்பேசி பதற்றதுடன் அழைப்புகள் வர ஆரம்பித்தது.
வெளியே அனைத்து இன மக்களும் இரவு உடைகளுடன் இருப்பதை பார்த்தோம். என் அலுவலகத்தில் இருக்கும் ஒரு பெங்காலி தன் பனியனோடு வந்துவிட்டான். அவனை கின்டலடித்துக் கொண்டிருந்தோம். கொஞ்சம் நேரத்தில் பக்கத்து குடியிருப்பிலிருக்கும் என் இன்னொரு அலுவலக நண்பர் வெற்றுடம்பில் துண்டைப்போர்த்துக்கொண்டு வந்தார்!
அருகிலேயே இருக்கும் காபிக்கடையில் பெரியத்திரையில் CNN டிவிச் சானலைப் காட்ட ஆரம்பித்தனர். அதில் சுமத்திராவில் மறுபடியும் ரிட்சர் 8.2 அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டதை அறிந்தோம்.
சுமார் 2 மணி நேரம் வெளியே , கதைத்துக்கொண்டும், CNN பார்த்துக்கொண்டும், மக்கள் கூட்டத்தோடு ரோட்டில் கழித்தப்பிறகு, எங்களை அவரவர் அடுக்குமாடி குடியிருப்புக்குள் உள்ளே போக அனுமதித்தார்கள். இப்போது மணி அதிகாலை 2:48 . இனி எங்கே தூங்குவது. அதான் கணினி முன் உட்கார்ந்து வலைப்பதிவு எழுதிகிட்டு இருக்கேன்……