அன்மையில் சென்னை லினக்ஸ் பயன்படுத்துவோர் மடற்குழுவின் மூலம் மதிப்புக்குரிய திரு ரிச்சர்ட் ஸ்டால்மேன் தமிழகம் வருவதை அறிந்தேன். வேலூர் தொழில் நுட்பக்கல்லூரியின் ஜெர்மன் மொழி விரிவுரையாளராக இருக்கும் திரு அன்பு அவர்களின் அறிமுகமும் அண்மையில் கிடைத்திருந்தது.

கடந்த சனிக்கிழமை 8 மணிவாக்கில் சென்னை விமான நிலையத்திற்கு ஆர்.எம்.எஸ் அவர்கள் கல்கத்தாவில் இருந்து வந்து சேருவதாக இருந்தது. 8 மணிவாக்கில் சென்னை விமான நிலையம் சென்றுவிட்டேன். கல்கத்தாவில் இருந்து திரு ஆர்.எம்.எஸ் வரும் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் அரைமனி நேரத்திற்குமேலாக தாமதமாக வரும் என்று தெரிந்தது.

சற்று நேரத்தில் திரு அன்பு மற்றும் அவர் கல்லூரியில் பணிபுரியும் விரிவுரையாளர்களும் வந்து சேர்ந்தார்கள். அவர்களுடன் திரு ஆனந்தபாபுவும் வந்திருந்தார். உலகிலேயே 2வது வேகமாக செயல்படும் ‘தன்டர்’ என்னும் அதிவேக கணினியை(super computer) பரிநிரல்களைக் கொண்டு வடிவமைத்தவர்தான் இந்த ஆனந்தபாபு. மேலும் குனூ பரிநிரல் திட்டத்தின் முழுநேர ஆர்வலராகவும் பல பரிநிரல் திட்டங்களை பராமரிப்பவராகவும் இருக்கிறார்.

சற்றுநேரத்தில் சென்னையிலுள்ள குனூ பரிநிரல் ( GNU Free Software)ஆர்வலர்கள் சிலரும் வந்து சேர்ந்தார்கள்.

[ஆர்.எம்.எஸ் வருகைக்காக காத்திருக்கும் பரிநிரல் ஆர்வலர்கள்…]

அனைவரும் பரஸ்பரம் அறிமுகப்படுத்திக்கொண்டு காத்திருக்கையில் , சரியாக 9:20 க்கு கல்கத்தா விமானம் சென்னையில் இறங்கியது. நாங்கள் பயனிகள் வெளியேரும் வழிமேல் விழிவைத்துக் காத்திருந்தோம். சரியாக 9:45 மணிக்கு பரிநிரல் சித்தாந்தத்தை உலகிற்கு அளித்து, மென்பொருள் உருவாக்கத்தில் மாபெரும் புரட்சியை படைத்த சித்தாந்தவாதியான ஆர்.எம்.எஸ் விமான நிலையத்திலிருந்து வெளியே வந்தார்.

பிறகு ஆர்.எம்.எஸ் அவர்கள், பரிநிரல் ஆர்வலர்கள் திரு நாகார்ஜூன், திரு ராமன்ராஜ் ஆகியோருடன் ஒரு காரில் வேலூரைநோக்கி கிளம்ப, நான், அன்பு, ஆனந்தபாபு , சென்னையைச் சார்ந்த ஆர்வலர் திரு முத்து மற்றும் வேலுர் தொழில்நுட்பக்கல்லூரியைச் சார்ந்த நண்பர்களுடன் ஒரு வேனில் கிளம்பினோம்.
[தொடரும்….]