ஊரில் இருந்து மலேசியா திரும்பி கிட்டதட்ட 1 வாரத்திற்கு மேல் ஆகிவிட்டது. ஊரிலிருந்து கொண்டுவந்தப் புத்தகங்களில் இண்போசிஸ் ஃபவுண்டேசன் தலைவி சுதா மூர்த்தி எழுதிய ‘உள்ளங்கையில் உலகம்’ புத்தகமும் ஒன்று. தற்போது அதைப்படித்துக்கொண்டிருக்கிறேன். அதில் 17ஆவது கட்டுரையாக பெற்றோர்கள் எப்படி அளவுக்கு அதிகமாக பிள்ளைகள் மேல் பாசத்தைக் காட்டி அவர்களின் சுதந்திரத்தை தடுக்கிறார்கள் என்பதை அழகாக எழுதியுள்ளார்.

அந்தக்கட்டுரையில் அவர் குறிப்பிட்ட இந்த வரிகளை அனைத்துப் பெற்றோரும் (குறிப்பாக வயதுவந்த பிள்ளைகளை வைத்திருக்கும் பெற்றோர்கள்) படிக்கவேண்டும்.

“…சிறகு முளைத்த பிறகும் பறவையை எத்தனை நாள்தான் கூண்டிலேயே அடைத்து வைத்திருக்கமுடியும்? நம் குழந்தைகளுக்கு இரண்டே இரண்டு விஷயங்களைத்தான் நம்மால் கொடுக்க முடியும்: அவை ஆழமான வேரும், உறுதியான சிறகுகளும். அப்போதுதான் அவர்களால் எங்கு வேண்டுமானாலும் சுதந்திரமாகப் பறந்து செல்ல முடியும்ழ வாழ்க்கையில் எந்த வசதி அவசியமானது என்று கேட்டால் பணமோ, பொருட்களோ அல்ல. சரியான வகையில் இயங்கத் தகுந்த சுதந்திரம்தான். அப்படிப்பட்ட சுதந்திரம் மனிதனுக்கு முதிர்ச்சியைத் தருகிறது. மனிதன் சரியான முடிவுகள் எடுக்க உதவுகிறது. அப்படிப் பட்ட முடிவுகள் நம்பிக்கையைத் தருகின்றன. அதுதான் உண்மையான செல்வம்… “