நேற்று இரவு தமிழ் பரி/திறவூற்று உலகில் ஒரு மகத்தான மாற்றத்திற்கான அடித்தளம் இடப்பட்டது. தமிழ் கணினித்துறையில் முன்னோடி செயலிகளில் ஒன்று நளினம். பார்க்க: http://nalinam.com

நளினம் செயலியைக்கொண்டு பலர் தமிழை கணினிகளில் பாவித்து வருகிறார்கள். இதனை உருவாக்கியவர் மலேசியாவைச் சார்ந்த நண்பர் சிவகுருநாதன். தமிழ் மீதும் தமிழர் மீதும் அளவில்லா அக்கரை கொண்டவர். தற்போது அவர் அமெரிக்காவில் வசிக்கிறார். விரைவில் ஆஸ்திரேலியாவிற்கு செல்லவிருக்கிறார்.

கடந்த வருடம் இவர் மலேசியாவில் இருந்தபோது அவரின் நட்பு எனக்கு கிடைத்தது. அப்போது இருந்தே அவரின் நளினம் செயலியை பரி/திறவூற்றுச் செயலியாக ஆக்கச் சொல்லி கேட்டுவந்துள்ளேன் (நச்சரித்து வந்தேன் என்றுதான் சொல்லவேண்டும்). நேற்று அவரை யாகூத் தூதுவன் வழி சந்தித்து பேசிக்கொண்டிருந்தபோது ஒரு வழியாக அவரின் நளினத்தை பரிநிரலாக மாற்ற சம்மதித்துள்ளார். அதன் மூலநிரல் அனைத்தையும் என்னிடம் அனுப்பிவைத்துள்ளார். இனி அவற்றை சோதனை செய்து, சரியாக பரிநிரல் காப்புரிமை இட்டு வலையேற்றவேண்டும். அவருடன் சேர்ந்து இப்பணியை விரைவில் முடிக்கமுடியும் என்று நம்புகிறேன்.

அவரின் பல வருட உழைப்பை தமிழர்க்கு வழங்க முன்வந்திருக்கும் செயலை தமிழுலகம் பாராட்டவேண்டும்.

ஒரு புகழ்பெற்ற தமிழ் செயலி திறவூற்றாக மாற்றப்படுவது இதுவே முதல்முறையாக இருக்கப்போகிறது!